ஐபிஎல் மினி ஏலம்: 77 வீரர்களை வாங்கிய அணிகள்...அதிக தொகைக்கு போனவர் யார்?
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் இன்று நடைபெற்றது.
அபுதாபி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். கடைசி நேரத்தில் மேலும் 19 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.மினி ஏலம் தற்போது தொடங்கியுள்ளது. ஏலத்தை மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் நடத்துகிறார். இதில் முதல் வீரராக வந்த ஜேக் பிரேசர் மெக்கர்க்கை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை. இதனையடுத்து வந்த டேவிட் மில்லரை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது.
இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை ஏலத்தில் வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுக்கட்டினர். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் விலகியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கோதாவில் குதித்தது. இவரை வாங்க சென்னை - கொல்கத்தா இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இவரது விலை எகிறி கொண்டே சென்றது. இறுதியில் ரூ. 25.20 கோடிக்கு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் மினி ஏலம் முடிவடைந்துள்ளது. அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை (மொத்தம் 77) போட்டி போட்டு வாங்கின. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு எதிர்பார்த்தது போலவே கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்.
Live Updates
- 16 Dec 2025 5:02 PM IST
இளம் இந்திய வீரர்களான ருச்சித் அஹிர், சன்விர் சிங், கமலேஷ் நாகர்கோட்டி, தனுஷ் கோட்டியான் ஆகியோரை யாரும் வாங்கவில்லை.
- 16 Dec 2025 4:59 PM IST
அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இடம்பெற்றிருந்த இந்திய இளம் உள்ளூர் ஆல் ரவுண்டரான பிரஷாந்த் வீரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மாறி மாறி மல்லுக்கட்டின. இதனால் இவரது விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. இறுதியில் அவரை ரூ.14.20 கோடி என்ற மலைக்க வைக்கும் தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன அன்கேப்டு வீரர் என்ற சாதனையை பிரஷாந்த் வீர் படைத்துள்ளார்.
- 16 Dec 2025 4:53 PM IST
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மஹிபால் லோமரர், எதன் டாம் ஆகிய அன்கேப்டு வீரர்களை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
- 16 Dec 2025 4:50 PM IST
அன்கேப்டு இந்திய வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஆகிப் சலாமை ஏலத்தில் எடுக்க பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி போட்டியிலிருந்து விலகியது. இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோதாவில் குதித்தது.
இறுதியில் ரூ. 30 லட்சம் என்ற அடிப்படை விலையில் இடம்பெற்றிருந்த அவரை ரூ. 8.40 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது.
- 16 Dec 2025 4:25 PM IST
ஆச்சரியமளிக்கும் வகையில் சுழற்பந்து வீச்சாளர்களான முஜீப் உர் ரஹ்மான், தீக்ஷனா, ராகுல் சஹார் ஆகியோரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
- 16 Dec 2025 4:23 PM IST
தென் ஆப்பிரிக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நார்ட்ஜேவை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வாங்கியுள்ளது.
- 16 Dec 2025 4:21 PM IST
உள்ளூர் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டாத அணிகள்:
இந்திய அன்கேப்டு வீரர்களான அதர்வா தைடே, அன்மோல்ப்ரீத் சிங், அபினவ் தேஜ்ரானா, அபினம் மனோஹர், யாஷ் தூள், ஆர்யா தேசாய் ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை.
- 16 Dec 2025 4:16 PM IST
வெஸ்ட் இண்டீஸ் வீரரான அகேல் ஹோசினை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த ஏலத்தில் சென்னை அணி வாங்கிய முதல் வீரர் இவர் என்பது குறிப்பிடத்த்க்கது.
- 16 Dec 2025 4:12 PM IST
இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோயை வாங்க சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மாறி மாறி போட்டி போட்டன. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி போட்டியிலிருந்து வெளியேறியது. இறுதியில் ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது.












