தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த வக்கீல்கள் கைது: சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெற்று போராட எந்தத் தடையுமில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.;
சென்னை,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1-ந் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் குதித்தனர்.
கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டமாக நடத்தப்படும் என அறிவித்து நடைபாதையில் பந்தல் அமைத்து தங்களது போராட்டத்தை தொடங்கினார்கள். பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, ‘சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதையடுத்து, நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரியில் உள்ள சமூக நல கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார் எனவும் போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போது காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெற்று போராட எந்தத் தடையுமில்லை என்றும் அனுமதியோடு போராட்டம் நடந்து, போலீசார் தடுத்தால் தலையிடலாம் எனவும் அனுமதி பெறவில்லை என தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் தெரிவித்ததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் முறையீடு குறித்து மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்விலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.