ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு
வியாழக்கிழமை சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு மூலவர் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.;
நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில், நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வியாழக்கிழமை தோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மூலவர் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தங்க கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் காட்சியளித்த குரு பகவானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி சவுந்தரநாயகி அம்மன் சமேத கரும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.