அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2025-07-25 13:39 IST

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி நிறை புத்தரிசி பூஜை, ஆடி களப பூஜை என மாதம் முழுவதும் திருவிழா களைகட்டும். குறிப்பாக, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி நாட்களில் நடைபெறும் வழிபாடுகள் மிகவும் விசேஷமானவை.

அவ்வகையில் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பதற்காக பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

கோபி

கோபி பகுதியில் உள்ள கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் காலை 6 மணி அளவில் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு பிறகு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

மேலும் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், கோபி தண்டு மாரியம்மன் கோவில், கோபி மகா மாரியம்மன் கோவில், கோபி படையாட்சி மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்செய்தனர். சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

கோவை

கோவை கணபதி மணியகாரம்பாளையம் அருகில் உள்ள உடையாம்பாளையம் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் அதிகாலை முதல் நடைபெற்றன. அம்மனுக்கு அணிகலன்கள், ஆபரணங்கள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டும், புத்தப்புது பட்டாடை அணிவிக்கப்பட்டும் அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடும் மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் பெருமளவு திரள்வார்கள். அப்போது பெண் பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

அவ்வகையில் ஆடி இரண்டாவது வெள்ளியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளியம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதிகளில் உள்ள முத்தாரம்மன் கோவில், சந்தன மாரியம்மன் கோவில், உச்சினி மாகாளியம்மன், சுந்தரி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன. இந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். குறிப்பாக பெண் பக்தர்கள் அதிக அளவில் கோவில்களுக்கு வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

தாழக்குடியில் உள்ள அவ்வையாரம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டார்கள். இந்த சிறப்பு வழிபாடுகளில் டில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்