தர்மபுரி: ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update:2025-07-24 16:18 IST

அமாவாசை தினம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், தர்ப்பணம் செய்யவும் ஏற்ற நாளாகும். அதேபோல் அமாவாசை தினம் வாயு பகவானுக்குரிய தினமாகக் கருதப்படுகிறது. ஆஞ்சநேயர் வாயு புத்திரன் என்பதால், அமாவாசை அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது, வாயு பகவானை வழிபடுவதாக கருதப்படுகிறது. அமாவாசை அன்று ஆஞ்சநேயரை வழிபட்டால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

அவ்வகையில் இன்று (24.7.2025) ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி எஸ்.வி,ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சுவாமி கோவில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில்வ தர்மபுரி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும் ஆடி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் குப்புசெட்டிபட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சுவாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்