ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா
ஆடி அமாவாசை சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.;
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா கடந்த 15-ந் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு சுவாமி வெவ்வேறு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடி அமாவாசையான இன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பால்,தயிர், மஞ்சள்,பன்னீர்,சீவக்காய், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை 5 மணிக்கு விலாமிச்சை வேர் சப்ரத்தில் சேர்ம திருக்கோலத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். இரவு 11 மணிக்கு சாமி கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
நாளை வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாக சாந்தி, இரவு 10:30 மணிக்கு சுவாமி மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி, திரு கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பகல் 12.30 மணிக்கு அன்னதானம், பிற்பகல் 3 மணிக்கு ஆலிலைச்சயன அலங்காரம், மாலை 6.00 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது.