ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்; ரூ.7 கோடி வருவாய் இழப்பு

ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2025-08-18 01:21 IST

ராமேசுவரம்,

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 55-க்கும் மேற்பட்ட பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் படகுகளை மீட்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 11-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்றுடன் 7-வது நாளை எட்டியுள்ளது. 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி என்ற விகிதத்தில் நேற்று வரை ரூ.7 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்