தமிழ்நாட்டில் நாளை முதல் 38 ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள்: எல்.முருகன்

தமிழ்நாட்டில் நாளை முதல் 38 ரெயில்கள் கூடுதல் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-17 19:19 IST

சென்னை,

சென்னையில் மத்திய மந்திரி எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விரைவு ரெயில்கள், அதிவிரைவு ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் மக்களிடமிருந்து தமக்கு வந்ததாகவும், அதை தாம் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் 38 ரெயில்கள் கூடுதல் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த அறிவிப்பின்படி சென்னை சென்ட்ரல்- சிவமோகா வாராந்திர அதிவிரைவு ரெயில் (12691) ஆம்பூரில் நின்று செல்லும். சிவமோகாவிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை (12692) மறு மார்க்கத்திலும் இந்த ரெயில் ஆம்பூரில் நின்று செல்லும். அதேபோல தன்பாத்- ஆலப்புழா விரைவு ரெயில் (13351) குடியாத்தம், வாணியம்பாடியில் தலா 2 நிமிடங்கள் நிற்கும். கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரெயில் (16322) இருகூர் மற்றும் சிங்காநல்லூரில் நின்று செல்லும். இந்த ரெயில் மறு மார்க்கத்திலும் (16321) மேற்கூறிய ரெயில் நிலையங்களிலும், கூடுதலாக மேலப்பாளையத்திலும் நின்று செல்லும்.

புதுச்சேரி- கன்னியாகுமரி விரைவு ரெயில் (16861), பயணிகளின் வசதிக்காக வள்ளியூரில் நின்று செல்லும். தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

2025-26-ல் மாநிலத்தின் ரெயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.6,626 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009-2014 ஆண்டுகளுக்கு இடையே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்த ஒதுக்கீடு ரூ.879 கோடியாக இருந்தது. ரெயில்வே திட்டங்களுக்காக கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டதை விட தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தொகை 654 சதவீதம் அதிகமாகும்.

அமிர்த பாரத ரெயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2948 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி மற்றும் சேலம் ரெயில் நிலையங்களை புனரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

2,587 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் 33,467 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 10 புதிய ரெயில் பாதைகள், 3 அகல ரெயில் பாதைகள் 9 இரட்டை வழி பாதைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் மேம்பாலச்சாலை திட்டப்பணிகளும் விறுவிறு என்று நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்