தவெக கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.;

Update:2025-07-17 11:45 IST

சென்னை,

நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சிக் கொடி நிறம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டிருந்தது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பு சார்பில் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டது.

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை, தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கு சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறங்கள் இடம்பெற்றுள்ள கொடி உருவாக்கப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு வர்த்தக முத்திரைக்கான பதிவையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தவெக கட்சித் தலைவர் விஜய் கடந்த 2024 தொடங்கி கட்சியின் கொடி அறிமுகம் செய்தார். அதில் சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறங்கள் இடம் பெற்றிருந்தது. இதை எதிர்த்தும், தவெக கட்சி கொடியில் உள்ள வண்ணங்களை நீக்க உத்தரவிடக் கோரியும் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனர் தலைவர் பச்சையப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே குறிப்பிட்ட நிறங்களை கொண்ட கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழக கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள வண்ணத்தை நீக்க கோரி மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தவெக கட்சிக் கொடி தங்கள் அமைப்பின் கொடியை பிரதிபலிப்பதாக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கு தொடர்பாக தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்