சாதி அடிப்படையில் கோவிலுக்குள் நுழைவதை யாராவது தடுத்தால்.... ஐகோர்ட்டு எச்சரிக்கை
சாதி அடிப்படையில் கோவிலுக்குள் நுழைவதை தடுப்போருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
கோப்புப்படம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி எனும் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பட்டியலினத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்து தள்ளிவிட்டதாகவும், கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்கு பின்னிருந்துதான் சாமி தரிசனம் செய்ய பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறி வெங்கடேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஜூலை 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்த் திருவிழாவில் பட்டியலினத்தவர்கள் பங்கேற்கவும், கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது எனக் கூறி, புதுக்குடி அய்யனார் கோவிலுக்கு பட்டியலின மக்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும், கோவிலில் அனைத்து தரப்பு மக்களும் தரிசனம் செய்வதையும், விழாக்களில் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பல்வேறு தலைவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆலய நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை எனக் குறிப்பிட்ட நீதிபதி, சாதி அடிப்படையில் கோவிலுக்குள் நுழைவதை யாரேனும் தடுத்தால், அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.