சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களை அடுத்த மாதம் முதல் கம்ப்யூட்டர் வழியாக அனுப்ப அரசு உத்தரவு
சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களை அடுத்த மாதம் முதல் கம்ப்யூட்டர் வழியாக அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குனர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளப் பட்டியல்களை கணினி மற்றும் இணையதளம் மூலமாக அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களையும் அதே வழியில் அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, ரூ.20 ஆயிரம் வரையிலான சம்பளம் சாராத பட்டியல்களை கணினி மூலமாக அனுப்பும் நடைமுறையை ஆகஸ்டு மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. மின்சாரம், தொலைபேசி கட்டணம், முன்பணம் சார்ந்த பணப் பட்டியல்கள், பயணப்படி ஆகியவற்றை இனி இணையதளத்தை பயன்படுத்தி அனுப்ப வேண்டும்.
மேலும் ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமான பணப் பட்டியல்களை அக்டோபர் மாதத்தில் இருந்து கணினி மூலமாக அனுப்ப வேண்டும். ரசீதுகளையும் அதனுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.