சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுவிப்பு
தூய்மைப் பணியாளர்கள் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.;
சென்னை,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1-ந் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் குதித்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டமாக நடத்தப்படும் என அறிவித்து நடைபாதையில் பந்தல் அமைத்து தங்களது போராட்டத்தை தொடங்கினர். பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில், நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரியில் உள்ள சமூக நல கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம், தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த விவாதத்தை எழுப்பியது. தூய்மைப் பணியாளர்கள் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், 12 மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த 922 தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.