பாமகவில் நிறுவனருக்கு எந்த அதிகாரமும் கிடையாது - பாலு பேட்டி
ராமதாஸ் தன்னைத்தானே தலைவராக அறிவித்துக்கொள்ள முடியாது என்று அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.;
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், புதுச்சேரி அருகே ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டத்துக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தப் பொதுக்குழு செல்லாது என்று அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு கூறியதாவது:
பா.ம.க. பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் அன்புமணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோரது பதவிக்காலம் முடிந்துவிட்டதாகக் கூறினார்கள். இந்தப் பதவிக்காலத்தைக் கடந்த 9-ஆம் தேதியிலிருந்து மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்துள்ளோம். இதனால், தற்போது பா.ம.க. தலைவராக அன்புமணியே உள்ளார். இதன் மூலம், தலைவருக்கும் பொதுச் செயலாளருக்குமே பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் உள்ளது. அவர்கள் இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்டுவது செல்லாது. செல்லாத ஒரு பொதுக்குழுவைக் கூட்டி எந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தாலும், அது பா.ம.க.வைக் கட்டுப்படுத்தாது.
ராமதாஸ் மரியாதைக்குரியவர். பா.ம.க.வை உருவாக்கிப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். பல தியாகங்களையும் செய்தவர். கட்சி உருவானபோது, கட்சிப் பதவியிலிருந்து அவர் தன்னை விடுவித்துக்கொண்டார். “எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். கட்சி நிர்வாகத்தில் நான் தலையிடமாட்டேன். நான் ஆலோசனை மட்டுமே தெரிவிப்பேன்” என்று கூறியிருக்கிறார். இது கட்சியின் விதிகளிலும் உள்ளது.
1995-ஆம் ஆண்டு பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட விதியின்படி, தலைவர்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். அதைத் தாண்டி, நிறுவனராக இருக்கும் ராமதாஸ் தன்னைத்தானே தலைவராக அறிவித்துக்கொள்ள முடியாது. தலைவர் மற்றும் நிர்வாகி மீது நம்பிக்கை இல்லை என்றால், பொதுக்குழுவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்ற முடியும். நாங்கள் நடத்திய பொதுக்குழுவில் 100 சதவீதம் பேர் பங்கேற்றிருக்கிறார்கள். 3,644 பேர் நாங்கள் நடத்திய பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.