கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள்? - தமிழக அரசு விளக்கம்
கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் உள்ளனர் என்று வீடியோ ஒன்றில் பாஜக எம்பி ஒருவர் பேசியுள்ளார்.;
சென்னை,
தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை 'கொளத்தூர் தொகுதியில் 84-ம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11-ல் 30 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ரபியுல்லா என்று ஒரே பெயரில் 3 வாக்காளர்கள் உள்ளனர்' என்று பாஜக எம்.பி பேசியதை தமிழக பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11-ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி. வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11 எண் கொண்ட ஏ.எஸ்.வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இதில், ரபி என்பவரின் பெயர் வரிசை எண் 50லும், 52ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் தந்தை என்கிற இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், காணொளியில் குறிப்பிட்டதுபோல் ரபி என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை. மேலும், வாக்குச்சாவடி எண் 157ல் (வேறு பகுதி) ரபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது.
11 எண் கொண்ட குடியிருப்பில் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிப்பது போன்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். வதந்தியைப் பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.