கோவை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு
உடுமலைப்பேட்டை நரசிங்கபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.;
கோவை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொள்வதுடன், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் கட்சியினருடன் ஆலோசனை செய்வதுடன், ரோடுஷோ நடத்தி மக்களையும் சந்தித்து வருகிறார்.
கடந்த 22, 23-ந்தேதி கோவை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மாலை 5.25 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு கோவை விமானநிலையம் வந்தடைந்தார். விமானநிலையத்தில் அவருக்கு கோவை, திருப்பூர் மாவட்டங்கள் சார்பில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நரசிங்கபுரத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து கோவை மற்றும் திருப்பூர், உடுமலைப்பேட்டையில் நாளை காலை அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கவிருக்கிறார். தொடர்ந்து, பொள்ளாச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர்காமராஜர், வி.கே.பழனிசாமி, சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரது உருவச்சிலைகளை திறந்து வைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமானத்தின்போது உயிரிழந்தவர்களின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவரங்கத்தைத் திறந்து வைக்கும் மு.க. ஸ்டாலின், வி.கே.பழனிசாமி நினைவரங்கத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும், திட்டத்தின் மாதிரி வடிவத்தையும் பார்வையிடவுள்ளார். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி கோவை நகரில் 500 போலீசாரும், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் 800 போலீசார் உள்பட மொத்தம் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.