திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-08-10 21:25 IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

கடந்த மாதம் 7-ந்தேதி திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. அதனை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த மண்டல பூஜை நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவடைய இருக்கிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றது. இன்று விடுமுறை தினம் என்பதாலும், மண்டல பூஜை நிறைவு பெறுவதை முன்னிட்டும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர்.

கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், பொது தரிசன வரிசை, ரூ.100 கட்டண தரிசன வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்