வேளாங்கண்ணி அருகே அந்தோணியார் ஆலய தேர்பவனி
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், சூசையப்பர், அந்தோணியார், ஆரோக்கியமாதா பவனி வந்தனர்.;
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அந்தோணியாரின் பெரிய திருத்தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், சூசையப்பர், அந்தோணியார், ஆரோக்கியமாதா உள்ளிட்ட சொரூபங்களை எழுந்தருளச் செய்தனர். பங்குத்தந்தை அற்புதராஜ் புனிதம் செய்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. அப்போது வண்ணமிகு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.