ஆடி கடைசி செவ்வாய்: அம்மன் கோவில்களில் பொங்கலிட்டு, கொழுக்கட்டை, கூழ் படைத்து சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விசுவரூப தரிசனமும் நடந்தது.;
கொட்டாரம் சந்தன மாரியம்மன் கோவிலில் கொழுக்கட்டை மற்றும் கூழ் தயாரித்த பெண்கள்
அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறும் ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடும் மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் பெருமளவு திரள்வார்கள்.
அப்போது பெண் பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அவ்வகையில் ஆடி கடைசி செவ்வாயையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
தாழக்குடியில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் ஆடி கடைசி செவ்வாய் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், தீபாராதனை போன்றவை நடைபெற்றன. அவ்வையார் அம்மனுக்கு பொங்கல், கொழுக்கட்டை, கூழ் போன்றவை படைத்து வழிபட்டனர். அதிகாலையில் இருந்தே கோவிலில் பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலை சுற்றி பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் கூழ், கொழுக்கட்டை, போன்றவைகளை மலைபோல் குவித்து படைத்து வைத்து அம்மனை வழிபட்டனர்.
இதேபோல கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி தெப்பக்குளம் இசக்கியம்மன் கோவில் , மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், கருங்காளி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், வடிவீஸ்வரம் முத்தாரம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதிகளில் உள்ள முத்தாரம்மன் கோவில், சந்தன மாரியம்மன் கோவில், உச்சினி மாகாளியம்மன், சுந்தரி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி கடைசி செவ்வாயையொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன. பெண் பக்தர்கள் கொழுக்கட்டை மற்றும் கூழ் படைத்து அம்மனை வழிபட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி கடைசி செவ்வாயையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விசுவரூப தரிசனமும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடந்தது.
அதன்பிறகு உஷபூஜையும் உஷ தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.
மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு ஸ்ரீபலிபூஜை மற்றும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது.
பின்னர் அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.