கள்ளக்காதலுக்கு இடையூறு... இரண்டு முறை மனைவி செய்த செயலால் கணவர் உயிரிழப்பு
சிகிச்சைக்கு பின் குணமடைந்த கணவருக்கு இரண்டாவது முறையாக தயிரில் விஷத்தை கலந்து சாப்பிட கொடுத்துள்ளார்.;
லக்னோ,
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சுனில். இவருடைய மனைவி சஷி. இவர்கள் பிரோசாபாத் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சுனிலின் மனைவிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த யாதவேந்திரன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த உறவிற்கு இடையூறாக இருந்த சுனிலை தீர்த்துக்கட்ட வேண்டும் என சஷி மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் திட்டம் தீட்டினர். இதனை தொடர்ந்து யாதவேந்திரன் சஷியிடம் விஷப் பொட்டலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதனை கடந்த மே 13-ம் தேதி உணவில் கலந்து சுனிலுக்கு சாப்பிட கொடுத்தார். மனைவியின் சதித்திட்டம் அறியாத சுனில் உணவை சாப்பிட்டார். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார். ஆனால் அவரது மனைவி இரண்டாவது முறையாக தயிரில் விஷத்தை கலந்து சாப்பிட கொடுத்துள்ளார். இரண்டு முறை விஷம் கொடுக்கப்பட்டதால் சுனில் பரிதாபமாக உயிரிழந்தார் .
இதனை அவரது குடும்பத்தினர் ஒரு இயற்கை மரணம் என்று நம்பினர். ஆனால் சில நாட்களுக்கு பின்னர் சஷியின் நடவடிக்கைகளில் அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனிலின் தாயார் தனது மருமகள் சஷியின் மீது சந்தேகம் உள்ளதாக துண்ட்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சஷியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. சஷி தனது கள்ளக்காதலனுடன் திட்டமிட்டு சுனிலை கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சஷி மற்றும் யாதவேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலனுக்காக கணவருக்கு இரண்டு முறை விஷம் கொடுத்து பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.