விவாகரத்து கேட்ட மனைவியை கோர்ட்டு வளாகத்தில் வைத்தே குத்திகொன்ற டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்

விவாகரத்துக்கோரி லெட்சுமி தொடர்ந்த வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.;

Update:2025-07-30 19:44 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் செயின் கபீர் நகர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 39). லாரி டிரைவரான இவருக்கும் லெட்சுமி என்ற பெண்ணுக்கும் 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

இதனிடையே, குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் குடித்துவிட்டு மனைவி லெட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து, சந்தோசை விட்டு பிரிந்த லெட்சுமி மகளுடன் தனது அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும், சந்தோசிடமிருந்து விவாகரத்துக்கோரி 2022ம் ஆண்டு கீழமை கோர்ட்டில் லெட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில், விவாகரத்துக்கோரி லெட்சுமி தொடர்ந்த வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லெட்சுமி தனது மகளை அழைத்து வந்தார். சந்தோசும் கோர்ட்டிற்கு வந்திருந்தார்.

விவாகரத்து வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென சந்தோஷ் தான் மறைத்து கொண்டுவந்த கத்தியால் மகள் கண்முன்னே கோர்ட்டு வளாகத்தில் வைத்து மனைவி லெட்சுமியை சரமாரியாக குத்தினார். லெட்சுமியின் முகம், வயிற்றுப்பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் லெட்சுமி சரிந்து விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த கோர்ட்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், லெட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். லெட்சுமிக்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேவேளை, லெட்சுமியை குத்திக்கொன்றுவிட்டு தப்பியோட முயன்ற சந்தோசை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சந்தோசை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விவாகரத்து கேட்ட மனைவியை லாரி டிரைவர் கோர்ட்டு வளாகத்தில் வைத்தே குத்திகொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்