எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.;
டெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
அதேவேளை, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து இன்று முதல் விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, இரு அவைகளிலும் தலா 16 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை கூடின. அப்போது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.