காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுற்றிவளைத்து என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.;
ஜம்மு,
ஜம்மு ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன்கள் மூலம் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில், மூன்று பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த இந்திய ராணுவத்தினரை பார்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக என் கவுண்டர் என பாதுகாப்பு படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய ராணுவத்தினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்றும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. . இவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பது கூறப்படுகிறது.
தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். காஷ்மீரில் பஹல்காம், ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த ஏப் 22-ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொலை பயங்கரவாதிகளின் இந்த வெறிச் செயலுக்கு ' ஆபரேஷன் சிந்தூர் ' மூலம் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.