மனைவியையும், மாமியாரையும் கொன்று புதைத்த இடத்தில் வாழைக்கன்று நட்ட நபர்

ஒடிசாவில் நபர் ஒருவர் மனைவியையும், மாமியாரையும் கொன்று வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் புதைத்துள்ளார்.;

Update:2025-07-30 19:51 IST

கோப்புப்படம் 

மயூர்பஞ்ச்,

ஒடிசாவில் நபர் ஒருவர் தனது மனைவியையும், மாமியாரையும் கொன்று தோட்டத்தில் புதைத்துள்ளார். மேலும் புதைத்த இடத்தில் வாழைக்கன்றுகளை நட்டு ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேபாஷிஷ் பத்ரா. இவரது மனைவி சோனாலி தலால் (23 வயது). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சோனாலியின் தாய் சுமதி தலால், சோனாலியையும், பேரனையும் அழைத்து கொண்டு தேபாஷிஷ் பத்ராவின் வீட்டுக்கு சமரசம் செய்ய சென்றுள்ளார்.

ஒரு வாரம் அங்கு தங்கியிருந்த நிலையில், கடந்த 19-ந்தேதி இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, தேபாஷிஷ் பத்ரா சோனாலி மற்றும் சுமதியை கல்லால் அடித்துக் கொலை செய்தார். தொடர்ந்து அவர்களது உடல்களை தனது வீட்டின் பின்புறம் உள்ள எலுமிச்சைத் தோட்டத்தில் புதைத்துள்ளார். சந்தேகம் ஏற்படாமல் இருக்க அந்த இடத்தில் வாழைக்கன்றுகளை நட்டுள்ளார்.

பின்னர் இருவரும் காணாமல் போனதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் பத்ராவும் அவரது மகனும் கவலையின்றி இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கிராமவாசிகள் போலீசில் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது தோட்டத்தில் மண் தளர்வாக இருப்பதாகவும், அங்கு புதிதாக வாழைக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் பத்ராவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரைக் கைது செய்த போலீசார், அழுகிய நிலையில் இருந்த, சோனாலி மற்றும் சுமதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்