பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும்; அமித்ஷா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.;

Update:2025-07-30 20:15 IST

டெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அதேவேளை, ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, கடந்த 2 நாட்கள் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் உரையாற்றினர்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்ற உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதாவது, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட வேண்டுமென மக்கள் நினைத்தனர். அதேபோல், பயங்கரவாதிகள் 3 பேரும் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மதத்தை கேட்டு பெண்கள், குழந்தைகள் கண்முன்னே கொலை செய்யும் கொடூரம் இதுவரை எங்கும் நடைபெறவில்லை. தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால், அரசியலுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கிறது.

காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை திருப்திப்படுத்தவே முக்கியத்துவம் கொடுக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்துவிட்டது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும்' என்றார்.

முன்னதாக, அமித்ஷா உரையாற்றிக்கொண்டிருந்தபோதே விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்