நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு நிகழ்ச்சி
காந்திமதி அம்பாள் மடியில் முளைக்கட்டிய சிறுபயரை கட்டிவைத்து, கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.;
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21-ந் தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி அதிகாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
முளைக்கட்டு நிகழ்ச்சி
இந்த நிலையில் 10-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அம்பாளுக்கு வளையல் அணிவிக்க கடைகளில் பெண்கள் ஆர்வமுடன் வளையல்களை வாங்கினர். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சீர்வரிசை பொருட்களை பெண்கள் எடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அம்பாள் கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அப்போது அம்மன் மடியில் முளைக்கட்டிய சிறுபயரை கட்டிவைத்து கர்ப்பிணியாக காட்சியளித்தார். அப்போது மேளதாளம் முழங்க காந்திமதி அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். வளையல் அணிவிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் அம்பாளுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பிரசாதம்
மேலும் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் படைக்கப்பட்டன.
பின்னர் அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைந்தார். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. அம்பாள் மடியில் கட்டி வைக்கப்பட்ட முளைக்கட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, செயல் அலுவலர் இசக்கியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.