திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் தேரோட்டம்
அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.;
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என வெவ்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருவிழாவின் முக்கிய நிழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. பகல் 12.15 மணிக்கு உச்சிப்படிப்பும், பணிவிடையும் நடந்தது. பின்னர் மதியம் 1.15 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தேரில் அமர்ந்த அய்யா வைகுண்டரை திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர்.
தேரோட்டத்தை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகெண்டு அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்திற்கு பின்னர் அன்னதர்மம் வழங்கப்பட்டது. இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.