நாளை ஆடி செவ்வாய்.. திருமண தடை நீங்க அவ்வையார் வழிபாடு

ஆடி செவ்வாயில் விரதம் இருந்து வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.;

Update:2025-07-21 16:23 IST

பக்திக்கு உகந்த ஆடி மாதம் தொடங்கி உள்ள நிலையில், கோவில்களில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு ஏற்ற நாட்கள் ஆகும்.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் வீடு மற்றும் கோவில்களில் அம்மன் வழிபாடு நடைபெறுவதுபோல், சில பகுதிகளில் பெண்கள் ஒன்று சேர்ந்து அவ்வையார் விரதம் மேற்கொள்வார்கள். குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த வழிபாடு நடைபெறுகிறது.

ஆடி செவ்வாய் இரவு, ஊரில் உள்ள வயதில் மூத்த சுமங்கலி பெண், தனது வீட்டில் மற்ற பெண்களுடன் இணைந்து பச்சரிசி மாவினைக் கொண்டு உப்பில்லா கொழுக்கட்டைகளை தயார் செய்து அவ்வையாருக்குப் படைத்து அவ்வையாரின் கதையை மற்ற பெண்களுக்கு கூறி வழிபாடு நடத்துவார்.

இவ்வழிபாட்டில் ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் பிரசாதக் கொழுக்கட்டைகளை பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மட்டுமே உண்பர். ஆண்களுக்கு கொடுக்கக்கூடாது. இரவு நேரத்தில்தான் இந்த நோன்பு கடைபிடிக்கப்படும். இவ்விரதத்தினை மேற்கொள்வதால் வளமையான வாழ்வும், நீண்ட ஆயுளும், மாங்கல்ய பலனும் கிடைப்பதாக நம்பிக்கை.

ஆடி செவ்வாயில் விரதம் இருந்து அவ்வையாரை வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருமண தடை, தோஷம் நீங்கவும் குழந்தை பேறு கிடைக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் விதவிதமான கொழுக்கடைகளை படைத்து வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை (22.7.2025) நாளை வருகிறது. அவ்வையார் விரத வழிபாட்டை தொடர்ந்து மூன்று செவ்வாய்க் கிழமைகளில் செய்யலாம். ஆடி மாதம் விரதமிருக்க முடியாதவர்கள், தை மற்றும் மாசியில் விரதம் இருக்கலாம். 

Tags:    

மேலும் செய்திகள்