ஆடி கிருத்திகை, வார விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் திரண்ட பக்தர்கள்

ஆடி கிருத்திகையான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.;

Update:2025-07-20 23:57 IST

தூத்துக்குடி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்த நிலையில், ஆடி கிருத்திகை மற்றும் வார விடுமுறையான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்தனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில்  நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்து வருகின்றன. ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், வள்ளி குகை, கடற்கரைப் பகுதி, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து, விளையாடி மகிழ்ந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து  நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 7-ந்தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்