த.வெ.க. புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி: இன்று வெளியிடுகிறார் விஜய்
வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. திமுக தரப்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாக இறங்கி உள்ளது. தவெக சார்பாக 'மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்' என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுபடுத்த புதிய செயலி ஒன்றை இன்று (புதன்கிழமை) விஜய் அறிமுகப்படுத்த உள்ளார்.
இதற்கான நிகழ்ச்சி பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. பகல் 11 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வில் விஜய் பங்கேற்கிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து, மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். மாநாடு, மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்து நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்கிறார்.
இந்த சூழலில் மதுரையில் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்குப் பின் தொகுதி வாரியாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தவெக நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவெக சார்பாக நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.