இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குன்றத்தூர் அபிராமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கும்பகோணம்: பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு
கும்பகோணம் மாவட்டம் கபிஸ்தலம் அருகே பாம்பு கடித்து 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, பாம்பு அவரை கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா காலமானார்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா (வயது 54) மாரடைப்பால் காலமானார். தற்போது, அவர் 31-வது வார்டு கவுன்சிலராக இருந்தார்.
தூய்மைப்பணியாளர் போராட்டம் தொடரும் என அறிவிப்பு
சென்னை ரிப்பன் மாளிகை அருகே ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களைச் சேர்ந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி கோரிக்கை நிறைவேறும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டாலும் தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் பணி பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்த சென்னை மாநகராட்சி, போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தது.
நாடாளுமன்ற மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று மீண்டும் தொடங்கியநிலையில், விவாதம் கோரிய 21 நோட்டீசுகள் நிராகரிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க எம்.பி திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் நாட்டில் முக்கியமான வாக்காளர் பட்டியல் முறைகேடு பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா வலியுறுத்தினார்.
அதேபோல, திருணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓபிரையன் இதே பிரச்சினை எழுப்பினார், ஆனால் அவரை தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை
இதனைதொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை ஏற்கனவே 12 மணி வரை ஓத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்: அமெரிக்க ஏர்போர்ட்டில் பரபரப்பு
வாஷிங்டனில் உள்ள புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு தரையிறங்கும் போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது.
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தொடங்கி வைப்பு
தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தண்டையார் பேட்டை கோபால் நகரில் தொடங்கி வைத்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என நிர்வாகத் திறனற்ற திமுக அரசு. அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது. ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா?.
முதல்-அமைச்சரைப் போலவே. மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மாற்று சக்தி இல்லை.. முதன்மை சக்தி” - மதுரை மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த விஜய்
வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி...
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.மாற்று சக்தி நாமன்று.முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
பிற்பகல் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
சென்னை,
செங்கல்பட்டு,
திருவள்ளூர்,
ராணிப்பேட்டை,
காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை,
விழுப்புரம்,
கடலூர்,
அரியலூர்,
பெரம்பலூர்,
நீலகிரி,
கோவை,
கரூர்,
திருப்பூர்,
தேனி,
தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.