அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 போலீஸ்காரர்களுக்கு காவல் நீட்டிப்பு
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் சி.பி.ஐ. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.;
மதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த கொலை வழக்கினை முறையாக விசாரணை நடத்தி வருகிற 20-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே கேடு விதித்து உள்ளது. இதனால் அந்த தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் சி.பி.ஐ. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் அஜித் குமார் கொலை வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவர்களுக்கான நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து மதுரை தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி செல்வ பாண்டி உத்தரவிட்டார்.