பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவாரா? - எடப்பாடி பழனிசாமி பதில்
எல்லோரும் கட்சி மாறி மாறித் தான் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
திருப்பத்தூர்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேட்டியின்போது, “பாஜக கூட்டணியுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைந்து செயல்படுவார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே’’ என நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது. எனவே நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த சூழ்நிலை வரும்போது அதற்கான பதிலை நாங்கள் தருவோம் என்றார்.
நீங்களும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஒரே மேடையில் பேச உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே என்று மீண்டும் அவரிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “நீங்கள் இது குறித்து அவரிடம் தான் (நயினார் நாகேந்திரன்) கேட்க வேண்டும்’’ என்றார்.
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி.மைத்ரேயன் ஆகியோர் திமுகவில் இணைந்தது குறித்து அவரிடம் கேட்டபோது, “இது சுதந்திர நாடு, ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த கட்சியை சேர்ந்தவர்கள் அந்த கட்சிக்கு போகக்கூடாது என யாரும் தடுக்க முடியாது. எல்லோரும் கட்சி மாறி மாறித் தான் இருக்கிறார்கள். கட்சியின் விதிகளை மீறுபவர்களை கட்சியில் இருந்து அகற்றுவதும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பதும், தமிழக அரசியல் வரலாற்றில் புதிதல்ல” என்று கூறினார்.