ஒரே ஆண்டில் 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 120 அடியாக நீடிக்கும் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை (சனிக்கிழமை) நிலவரப்படி 120 அடியாக நீடித்து வருகிறது.;

Update:2025-07-26 10:35 IST


தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி மாலையில், தனது உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக நிரம்பியது. அணை வரலாற்றில் 94-வது ஆண்டாகவும் நிரம்பியது.

அதன்பிறகு மீண்டும் கடந்த 5-ந்தேதி, 20-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை 119.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 65 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதன்படி இந்த ஆண்டில் அணை 4-வது முறையாக நிரம்பி உள்ளது.

அணை நிரம்பி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (சனிக்கிழமை) காலை வினாடிக்கு 25,400 கன அடி வீதம் அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 25,000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடியும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7,000 கன அடியும் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்