அன்புமணியின் நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும்: வழக்கறிஞர் பாலு தகவல்
அன்புமணியின் நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும் என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது. 2 பேரும் தனித்தனியாக பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அரசியல் அரங்கை பரபரப்பாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் நேற்று தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் நேற்று தொடங்கினார். 100 நாட்கள் முக்கிய தொகுதிகளுக்கு சென்று பாமக நிர்வாகிகளையும், மக்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
டாக்டர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்த பயணத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று போலீஸ் டிஜிபியிடம் மனு கொடுத்தார். மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை சுட்டிக்காட்டி டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து நடைபயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அதற்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அன்புமணி நீதிமன்றத்தை நாட இருப்பதாக வெளியான தகவலுக்கு பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும். நீதிமன்றத்தை நாட அவசியம் இல்லை. நடை பயணத்திற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. எவ்வித மாற்றமும் இல்லாமல் நடைபயணம் தொடரும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது." என்று கூறினார்.