பிரதமர் மோடியிடம் 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்த எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடியை திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.;
கோப்பு படம்
திருச்சி,
2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து, தமிழக அரசியல் குறித்து பேச இருப்பதாக நேற்று மதியம் தகவல் வெளியானது. இதற்காக சேலத்தில் தங்கி இருந்த எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திருச்சிக்கு வந்தார்.
அங்கு தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவர், இரவு 9.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றார். தூத்துக்குடியில் விழா முடிந்த பிறகு, விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10.15 மணிக்கு பிரதமா் மோடி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது கோரிக்கை மனு ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி , பிரதமர் மோடியிடம் அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் இடம் பெற்று இருபதாவது;
- விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் .
- கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் .
- தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவண செய்வதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் உறுதி அளிததாகவும் கூறப்பட்டுள்ளது.