பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.;
சென்னை,
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோவில் வளாகத்தில் இன்று நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை வழியாக காரில் இருந்தபடியே மக்களைச் சந்திக்கிறார். நண்பகல் 12 மணியளவில் பெருவுடையார் கோவிலை வந்தடைகிறார். கோவில் நுழைவுவாயிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரர், விநாயகர், முருகன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். மத்திய கலாசாரத் துறை சார்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
இந்தநிலையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகம் வரும் பிரதமரை விருந்தோம்பலுடன் வரவேற்பது எங்கள் பண்பாடு. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்றார். மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த சேகர்பாபு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்ட நிதி ஒதுக்கீடை முதலில் விடுவிக்க வேண்டும் என்றார்.