வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி: அரசு பெருமிதம்

தமிழ்நாடு முழுவதும் 37,328 நியாயவிலைக் கடைகள் உள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது.;

Update:2025-07-27 12:42 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான உழைப்பின் காரணமாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடம் என்னும் அணிகலனைச் சூடியுள்ளது. இதில், திராவிட முன்னேற்றக் கழக அரசு, தொடங்கிய 1967-ம் ஆண்டு முதல் வறுமை ஒழிப்பை முன்னிலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வரலாறும் அடங்கியுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.5.2021 அன்று பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று பரவி உலகம் முழுவதும் உயிர்ப் பலிகள் வாங்கிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலும் எண்ணற்ற உயிர்கள் பலியாயின. பள்ளிகள் கல்லூரிகள் ஆலைகள், தொழிற்சாலைகள், கடைகள், ஏன் ஆலயங்கள் கூட மூடப்பட்டன. வரலாறு காணாத லாக்-டவுன் நிகழ்ந்து மக்கள் சொல்ல முடியாத தொல்லைகளுக்கு ஆளாயினர்.

அப்போது பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் எல்லோருக்கும் தடையின்றி உணவுப் பொருள்கள் வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, 2022 ஆம் ஆண்டில், 2,07,70,726 அரிசி அட்டைதாரர்களுக்கு, 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய கொரோனா நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. 2,08,42,716 அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வீதம் கொரோனா நிவாரண உதவித்தொகை இரண்டு தவணைகளாக 2021 மே, ஜூன் மாதங்களில் வழங்கப்பட்டன.

நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. (ISO) தரச்சான்றிதழ்:-

நியாயவிலைக் கடைகளில் பொருள்களைத் தரமாக வழங்கிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் நியாயவிலைக் கடைகளில் முழுமையான தர மேலாண்மையை உறுதி செய்வதற்காகக், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்கு 2023-ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டு வருகிறது. இதுவரை, தரம் மற்றும் பராமரிப்புக்காக 10,149 நியாய விலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ.: 9001 சான்றிதழும், பாதுகாப்பான உணவுச் சங்கிலி மற்றும் சேமிப்பிற்கான, 2,059 நியாய விலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ.: 28000 சான்றிதழும் பெறப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி பொலிவுறச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 5,481 நியாயவிலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நியாயவிலைக் கடைகள்:-

கூட்டுறவு துறையின் கீழ் 35,181 நியாயவிலைக்கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1527 நியாயவிலைக்கடைகளும், இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 152 நியாயவிலைக்கடைகளும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 468 நியாயவிலைக்கடைகளும், என மொத்தம் 37,328 நியாயவிலைக்கடைகள் தமிழ்நாடு முழுவதிலும் செயல்படுகின்றன.

இவற்றுள் 26,618 நியாயவிலைக்கடைகள், முழுநேரமும் செயல்படுகின்றன. 10,710 நியாயவிலைக்கடைகள், பகுதி நேரக் கடைகளாகச் செயல்படுகின்றன. இந்த நியாயவிலைக் கடைகள் வாயிலாக மொத்தம் 2 கோடியே 25 இலட்சத்து 93 ஆயிரத்து 654 மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றுள் 21,337 நியாயவிலைக்கடைகள், சொந்தக் கட்டடங்களிலும் 8,725 நியாயவிலைக்கடைகள் வாடகையில்லாக் கட்டடங்களிலும் 7,266 நியாயவிலைக்கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் செயல்படுகின்றன. தனியார் வாடகை கட்டடங்களில் செயல்படும் நியாயவிலைக்கடைகளுக்குச் சொந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்கு திராவிட மாடல் அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இக்கட்டடங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் பெறப்படும் நிதி, மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதி, ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன.

நெல் சேமிப்புத் தளங்கள்:-

விவசாயிகளின் கடின உழைப்பின் மூலம் கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது எனப் பிறப்பித்த ஆணைக்கு இணங்க 2022-2023 முதல் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு 31.3.2025 வரை, ரூ. 294.70 கோடியில் 3.63 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கொண்ட 23 நெல் சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 40,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புத் தளங்களின் கட்டுமானப் பணிகள் ரூ. 36.38 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகின்றன.

2,394 புதிய நியாயவிலைக் கடைகள்:-

பொதுமக்கள் எளிதாகக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கிப் பயன்படுத்திட வேண்டும் என விரும்பினார்கள். அதனால் அவர்கள் வசிக்கும் இடங்களின் அருகிலேயே பொது விநியோகக் கடைகள் அமைய வேண்டும் என்பதற்காக 4 ஆண்டுகளில் மக்கள் வாழும் பகுதிகளில் 789 முழு நேரக் கடைகளும், 1,605 பகுதி நேரக் கடைகளும், ஆக மொத்தம் 2,394 புதிய நியாயவிலைக் கடைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை:-

ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் யு.பி.ஐ. (UPI) முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டார்கள். இதுவரை, 10,661 நியாய விலைக் கடைகளில் யு.பி.ஐ. முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை நடைபெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு பங்கு மூலதனம்:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 100 கோடி ஆகவும், செலுத்தப்பட்ட பங்கு மூல தானம் ரு. 71.73 கோடி ஆகவும் இருந்தது. கடந்த 2024-2025 இல் திராவிட மாடல் அரசு பங்கு மூலதனம் ஆக 2000 கோடி ருபாய் வழங்கியதால் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 2100 கோடியாகவும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 2,071.73 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்றிமையாப் பொருள்களை விநியோகிப்பதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு நடப்பு ஆண்டில் ரூ.14,000 கோடியாக மானியத்தை உயர்த்தி ஒதுக்கீடு செய்துள்ளது திராவிட மாடல் அரசு.

புயல் நிவாரணப் பணி:-

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் துயர் கண்டு வேதனை அடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் உடனடி நிவாரணமாக மனித நேயத்துடன் தாராளமாக உதவிகள் வழங்கிட ஆணையிட்டார். அதன்படி, மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணத் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.6,000 வீதம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 24,78,229 குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.

அதுபோலவே தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதி கனமழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட வட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 6,36,760 குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 வீதமும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களிலும், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழையால் வெள்ளப் பாதிப்பு அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 14,58,164 குடும்பங்களுக்குத் தலா ரூ.1,000 வீதமும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

பெஞ்சல் புயல் நிவாரணப் பணி:-

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் 26.11.2024 முதல் வீசிய பெஞ்சல் புயலின் காரணமாக அதிகம் பாதிக்கபட்ட வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக 5 கிலோ அரிசி பைகள், 1 கிலோ பருப்பு, 1 கிலோ சர்க்கரை ஆகியவை 7 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

பொங்கல் தொகுப்புகள்:-

2022-ம் ஆண்டில் 2,15,67,122 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 20 பொருட்கள், ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

2023-ம் ஆண்டில் 2,19,33,342 அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ரூ.1000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

அதேபோல, 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 2,19,51,748 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டன.

2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 1,94,35,771 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டன.

இப்படி திராவிட மாடல் ஆட்சியில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் உணவுப் பொருள் வழங்கும் கடைகள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் உரிய நேரத்தில் வழங்கி, ஏழை எளிய மக்களின் வறுமையை நீக்கி வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் என்னும் பெருமையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்