பேரரசர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

பேரரசர் ராஜேந்திர சோழன், தென்னிந்தியா முழுவதும் வெற்றி பெற்றதுடன், கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்க திட்டமிட்டார்.;

Update:2025-07-27 17:24 IST

தஞ்சை,

ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தஞ்சையில் இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, திருச்சியில் இருந்து பிரதமர் மோடி தஞ்சைக்கு புறப்பட்டார். தஞ்சைக்கு வந்த பிரதமர் மோடி, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தோளில் அங்கவஸ்திரம் என தமிழக முறையிலான பாரம்பரிய உடை அணிந்து காணப்பட்டார்.

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இறை வணக்கம் செலுத்தியதுடன், ஆடி திருவாதிரையை முன்னிட்டு, தீபாராதனை காட்டி வழிபாடும் நடத்தினார். ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அவர், ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.

இந்த நாணயம் ரூ.1,000 மதிப்பை கொண்டது. அதன் முன்புறம், இந்தியாவின் இறையாண்மையை அடையாளப்படுத்தும் வகையில், தமிழில், வாய்மையே வெல்லும் என பொருள்படும் வகையிலான சத்யமேவ ஜெயதே என பொறிக்கப்பட்டு உள்ளது. அதன் மேல், அசோக சின்னம் உள்ளது. இடதுபுறத்தில், தேவநாகரியில் பாரத் என்றும் வலதுபுறத்தில், ஆங்கிலத்தில் இந்தியா என்றும் பதிக்கப்பட்டு உள்ளது. அசோகா தூணுக்கு கீழே, ரூபாய்க்கான அடையாளமும், ஆயிரம் என்ற எண்ணும் பொறிக்கப்பட்டு உள்ளன.

நாணயத்தின் பின்புறம், பேரரசர் ராஜேந்திர சோழன் 1-ன் கடற்படையை காட்சிப்படுத்தும் வகையில், நாணயத்தின் மையத்தில் உருவம் பதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, பேரரசர் ராஜேந்திர சோழன் 1-ன் ஆயிரம் ஆண்டுகள் கடற்படை பயணம் என்று ஆங்கிலம் மற்றும் தேவநாகரியில் வரி வடிவில் பொறிக்கப்பட்டு உள்ளது.

வட்ட வடிவில் 44 மி.மீ. விட்டம் கொண்ட இந்த நாணயம் 99.9 சதவீதம் தூய வெள்ளியால் உருவானது. 40 கிராம் எடை கொண்டது.

11-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பேரரசர் ராஜேந்திர சோழன், தென்னிந்தியா முழுவதும் வெற்றி பெற்றதுடன், தென்கிழக்கு ஆசியாவில் கடற்படையை நிறுவி வெற்றி கண்டவர். கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்க திட்டமிட்டார். அதற்காக கங்கையாற்றில் புனித நீரை கொண்டு வர அவருடைய ராணுவம் புறப்பட்டது. செல்லும் வழியெல்லாம் பல அரசுகளை வீழ்த்தி வெற்றி பெற்றது. பின்னர் புனித நீரை திரும்ப கொண்டு வந்து, புதிய நகரம் நிறுவப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்