விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டுதல்கள்: திருநெல்வேலி கலெக்டர் அறிவிப்பு

மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-27 19:59 IST

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே பொது மக்களுக்கு பின்வரும் வேண்டுகோள்கள் விடப்படுகிறது.

1. களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆ/ப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/ பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனசாயம்/ எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

5. சிலைகளை அழகுப்படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.

"சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ரசாயன பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது.

சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள். சிலைகளின் மேல் பூச்சிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற ரசாயனசாயங்கள் / எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்த கூடாது.

சுற்றுச் சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது.

அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும். வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கியெறியக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது.

பிரசாத விநியோகத்திற்கு மக்கும்/ மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும். பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள். குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது. அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது.

எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும். பிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது. அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும். ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

சிலைகளை கரைப்பதற்கு அறிவிக்கப்பட்ட இடங்கள்:

1. திருநெல்வேலி நகரம்- பேராட்சியம்மன் கோவில் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட குளம்.

2. உவரி- உவரி கடல்.

3. கூடன்குளம்- செட்டிகுளம் கடல்.

4. கூடன்குளம்- தில்லிவனம் தோப்பு கடல்.

5. சேரன்மகாதேவி- காருக்குறிச்சிக்குளம்.

6. அம்பாசமுத்திரம்- வாகைக்குளம்.

விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்