மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தியுள்ளது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.;
சேலம்,
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரால் 12.06.2025 அன்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டதுடன், மேட்டூரிலிருந்து திறந்த விடப்பட்ட நீர் கல்லணை வந்தவுடன், கல்லணை மதகுகளையும் 15.06.2025 அன்று திறந்து வைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென விவசாயிகளை அறிவுறுத்தினார்கள்.
முன்னதாக, இந்த ஆண்டு ரூ. 98 கோடி செலவில் துார்வாரும் பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, பாசனத்திற்கு நீரை கொண்டு செல்ல தேவையான துார்வாரும் பணிகள் முடிக்கப்பட்டதனால் கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீரானது சென்றுள்ளது. பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடக அணையிலிருந்து குறிப்பாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளிலிருந்து அதன் நீர்பிடிப்பு பகுதியில் மழைபொழிவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று முதல் வினாடிக்கு 35000 கனஅடி முதல் 70000 கனஅடி வரை அதிகரித்துள்ளது.
இன்று 27.07.2025 மாலை 4.00 மணி நிலவரப்படி 75400 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியில் உள்ளது, இச்சூழலில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வெள்ள அபாய எச்சரிக்கையினை விடுக்க சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தியுள்ளது. பொதுமக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் நீர் வெளியேற்றம் 60,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை தெரிவித்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து தற்போது ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதே அளவான ஒரு லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.