இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

"சம வேலைக்கு சம ஊதியம்” என்ற நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.;

Update:2025-07-27 16:18 IST

சென்னை,

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களைவோம் என்ற வாக்குறுதியினை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மற்றும் படிகள் 01-6-2009 முதல் மாற்றியமைக்கப்பட்டபோது, 01-6-2009-க்கு முன்பு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 என்றும், 01-6-2009-க்கு பின் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 5,200 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டதன் விளைவாக, 01-6-2009-க்கு பின் பணியமர்த்தப்பட்ட இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 25,000 ரூபாய் அளவுக்கு இன்று குறைவான ஊதியத்தை பெற்று வருகிறார்கள்.

இந்த வித்தியாசத்தை சீர் செய்யக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 2018 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, இதற்கு ஆதரவு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின், இந்த வாக்குறுதியை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறச் செய்தார். ஆனால், இந்த வாக்குறுதி தி.மு.க. ஆட்சி முடிவடையும் இந்தத் தருவாயிலும் நிறைவேற்றப்படவில்லை.

"சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 2023 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, இதற்காக ஒரு குழுவை தி.மு.க. அரசு நியமித்தது. இந்தக் குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இதே கோரிக்கையினை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்ட இடைநிலை ஆசிரியர்கள், செப்டம்பர் மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆதரவு தெரிவித்து, அதனை தேர்தல் வாக்குறுதியிலும் இடம் பெறச் செய்து, இதற்காக குழுவையும் அமைத்துவிட்டு, தற்போது அதனை நடைமுறைப்படுத்தாமல் காலந்தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. இதற்குப் பெயர்தான் "சொன்னதைச் செய்வோம்" என்பதா?

தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வர உள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியை மனதில் நிலை நிறுத்தி, இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்