நடைபயணத்திற்கு தடை - நீதிமன்றத்தை நாடும் அன்புமணி?
100 நாட்கள் முக்கிய தொகுதிகளுக்கு சென்று பாமக நிர்வாகிகளையும், மக்களையும் சந்திக்க அன்புமணி திட்டமிட்டிருந்தார்.;
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது. 2 பேரும் தனித்தனியாக பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அரசியல் அரங்கை பரபரபாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் நேற்று தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் நேற்று தொடங்கினார். 100 நாட்கள் முக்கிய தொகுதிகளுக்கு சென்று பாமக நிர்வாகிகளையும், மக்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
டாக்டர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்த பயணத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று போலீஸ் டிஜிபிக்கு கோரிக்கை விடுத்தார். 'நான்தான் பாமக நிறுவனர். அன்புமணி என்னிடம் எந்தவித அனுமதியையும் பெறவில்லை. அவருடைய நடைபயணம் பாமகவில் மேலும் குழப்பத்தை உண்டாகும். சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கும் வழிவகுக்கும். எனவே அவருடைய இந்த பயணத்துக்கு போலீசார் அனுமதி வழங்கக் கூடாது. தடை விதிக்க வேண்டும்' என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை சுட்டிக்காட்டி டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், நடைபயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அதற்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டரீதியாக முன்னெடுக்க அன்புமணி தீர்மானித்துள்ளார். இதனால் அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.