காமராஜர் விவகாரம்: "வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.." - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
சென்னை,
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி, காமராஜர் ஏசி அறை இல்லாமல் தூங்கமாட்டார் என்றும், அவர் இறப்பதற்கு முன்பு கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்றவேண்டும் என்றும் கூறியதாக பேசி இருந்தார்.
திருச்சி சிவாவின் பேச்சு, அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் பொதுத் தளத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட பல கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. இந்த சூழலில் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு திருச்சி சிவா விளக்கம் அளித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்!
பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.