நீதிதான் வேண்டும்: நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள ஐடி ஊழியர் கவினின் பெற்றோர் மறுப்பு

சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என கவினின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.;

Update:2025-07-29 16:35 IST

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.இவர்களது மகன் கவின் செல்வகணேஷ்(வயது 27). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கவின் தூத்துக்குடி பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் படித்த பாளை கே.டி.சி. நகரை சேர்ந்த சரவணன்-கிருஷ்ணகுமாரி தம்பதியரின் மகளுடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால் அவர் பழகுவது அந்த பெண்ணின் சகோதரரான பட்டதாரி வாலிபர் சுர்ஜித்(24) என்பவருக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் பலமுறை கவின் செல்வகணேசிடம் எச்சரித்த நிலையில் அவர் கேட்கவில்லை என்பதால் நேற்று முன்தினம் பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து சுர்ஜித், கவினை வெட்டிக்கொலை செய்தார்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்தை கைது செய்தார். இந்த கொலை சம்பவத்தில் அவரது தாய்-தந்தையரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரியும் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை வழக்கில் சேர்த்து நடவடிக்கை எடுக்கவும் கவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து அவரது உடலை வாங்க மறுத்து முக்காணி ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சப்-இன்ஸ்பெக்டர்களான சுர்ஜித்தின் தாய்-தந்தை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்வோம் என போலீஸ் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இந்த நிலையில் கவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்குவதற்காக பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.ஆனால் குற்றவாளியின் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே நாங்கள் நிவாரணத்தை ஏற்றுக்கொள்வோம் என கூறி நிவாரண தொகையை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கவினின் தந்தை சந்திரசேகர் கூறுகையில், எங்களுக்கு நிவாரணம் வேண்டாம், நீதி வேண்டும். கொலைக்கு முக்கிய காரணமான சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கைது செய்வோம் என நேற்று அதிகாரிகள் எங்களிடம் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் 15 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. இன்று மதியத்திற்குள் அவர்களை கைது செய்யாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்