கோவில்பட்டியில் லஞ்சம் வாங்கிய நகராட்சி பெண் ஊழியர் கைது: ரூ.10 ஆயிரம் பறிமுதல்
கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவில் விண்ணப்பம் செய்துள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊரணித் தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் தனது மனைவி காளிஸ்வரி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவில் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த நிலையில் பெயர் மாற்றம் செய்வதற்கு நகராட்சி வருவாய் உதவியாளர் நவீனா என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து செல்வகுமார், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் புகார் செய்துள்ளார். அவர்கள் அறிவுரையின்படி செல்வக்குமார், வருவாய் உதவியாளர் நவீனாவிடம் ரூ.10ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் பீட்டர்பால் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.