அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தபின் நடந்தது என்ன? - நிகிதா பரபரப்பு பேட்டி
காய்கறி, மளிகை பொருள்கூட வாங்குவதற்கு கூட தன்னால் வெளியே வரமுடியவில்லை என்று நிகிதா கூறினார்.;
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக வேலை செய்து வந்தவர், அஜித்குமார் (வயது 29).
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா, மடப்புரம் கோவிலுக்கு சென்ற இடத்தில் தனது நகை மாயமானதாக கூறிய புகார் தொடர்பாக மானாமதுரை தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு கடந்த 15 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமியிடம் கடந்த 23-ந்தேதி மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் 3½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், 2-வது கட்டமாக அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகியோர், மதியம் 1 மணி அளவில் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம், சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு மோகித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது, 6½ மணி நேரத்திற்கு மேல் நடந்தது.
ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, அஜித்குமார் உயிரிழந்த தினத்தில் கோவில் மற்றும் போலீஸ் நிலையத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விளக்கம் அளித்து இருந்தனர்.
நேற்று நிகிதாவின் நகைகள் மாயாமானது உண்மைதானா, அவர் பொய் புகார் அளித்தரா? என்பது தொடர்பாக விசாரித்தனர். மேலும், யாருடன் எல்லாம் செல்போனில் பேசினார் என்ற விவரங்களையும் கேட்டறிந்தனர். அவருடன் பேசிய நபர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சி.பி.ஐ. விசாரணையை முடித்து வெளியே வந்த நிகிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், "சம்பவம் நடந்த நேரத்தில் நடந்ததை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். என்னை பற்றி தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை என்ற நிலையில் இருக்கிறோம். என்ன நடந்தது என்பது தெரியாமல், ஒருவரையே குற்றம்சாட்டி திசை திருப்ப பார்க்கிறார்கள். பொய்யான தகவல்களை வேகமாக பரப்புகிறார்கள்.
ஒருவர் இறந்தது வேதனையான விஷயம். வேண்டும் என்று யாராவது அப்படி செய்வார்களா?. நாங்களும் வேதனையில்தான் இருக்கிறோம். காய்கறி, மளிகை பொருள்கூட வாங்குவதற்கு என்னால் வெளியே வரமுடியவில்லை. சாப்பிட, பெட்ரோல் போடுவதற்கு கூட வரமுடியவில்லை. கல்லூரியிலும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. உடன் இருப்பவர்களும் தொந்தரவு செய்கிறார்கள். நான் தவறு செய்தேனா? என்பதை ஆய்வு செய்யாமல், கடுமையாக நடந்து கொள்கிறார்கள். என்னவென்றே தெரியாமல் ஏதேதோ பேசுகிறார்கள்.
சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதை பற்றி நாங்கள் எதையும் கூறவில்லை. அது அவர்களின் கடமை. நானும் தற்கொலை செய்து கொண்டால், அதனையும் சமூக வலைதளங்களில் போட்டு விளம்பரமாக்கலாம் என பலரும் நினைத்து காத்திருக்கிறார்கள். நகை திருட்டு போனதாக புகார் அளித்தோம். அதுமட்டுமே நாங்கள் செய்தோம். போலீசார் எடுத்த நடவடிக்கைகள் எங்களுக்கு தெரியாது. நாங்கள் வீட்டிற்கு சென்று விட்டோம். அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் நாங்கள் பேசவில்லை. மீண்டும் விசாரணைக்கு அழைப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். நாங்களும், எங்கள் தரப்பு நியாயத்தை கூறுவதற்கு தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.