'நிசார்' செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் 30-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது
ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுண்டவுன் வருகிற 29-ந்தேதி தொடங்க உள்ளது.;
சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுண்டவுன் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறும் போது, 'இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய பூமியைக் கண்காணிக்கும் ரேடார் செயற்கைக்கோளான 'நிசார்' செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒரு முறை உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமித் தரவுகளை வழங்கும்' என்றார்.
மேலும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும். இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும் என்று தெரிவித்தார்.