முதல்-அமைச்சர் ஆக எனக்கு தகுதி இல்லையா? - திருமாவளவன் கேள்வி
நாம் ஒன்றிணைந்து உருவாகியது தான் மதசார்பற்ற அரசு என்று திருமாவளவன் கூறினார்.;
ராணிப்பேட்டை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியின் தீர்மான பொது விளக்க கூட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்த பகுதியில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளரும் நகர்மன்ற துணைத்தலைவருமான ரமேஷ்கர்ணா தலைமை தாங்கினார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது;-
இந்து மதத்தை எதிர்ப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் அல்ல, ஆனால் சட்ட மேதை அம்பேத்கர் கூற்றின்படி, மதசார்பின்மையை கடைப்பிடிக்காததை எப்போதும் கண்டிப்போம். மத்திய பா.ஜனதா அரசு நாட்டை ஆள மதம் வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறது.
மதசார்பின்மையை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிலிருந்து பின்வாங்காமல் நிலையாக இருப்பதால் எனக்கும் அந்த கட்சிக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் இந்து மதத்தை வெறுப்பது இல்லை. ஆனால் சனாதன தர்மத்தை நிச்சயமாக ஏற்காது. மத சார்பின்மையை கடைபிடிக்கும் அரசுடன் தான் தற்போது விடுதலைசிறுத்தைகள் கை கொடுத்துள்ளது. நாம் ஒன்றிணைந்து உருவாகியது தான் மதசார்பற்ற அரசு.
நானும் ரவுடிதான் என்ற வாசகத்திற்கு ஏற்ப தமிழகத்தில் புதிதாக உருவானவர்கள் எல்லாம் தன்னை முதல்-அமைச்சர் என்று கூறிக்கொள்கிறார்கள், இதில் 35 ஆண்டு பொது வாழ்க்கையில் அர்ப்பணித்த எனக்கு முதல்-அமைச்சர் ஆக தகுதி இல்லையா? இவ்வாறு கூட என்னை பலர் திசைதிருப்ப முயன்றார்கள். ஆனால் கொள்கை அடிப்படையில் உறுதியாக உள்ள கட்சியின் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். இவ்வாறு அவர் பேசினார்.