முறை தவறிய பழக்கம்...பம்புசெட்டில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு
என்ஜினீயரான பிரியங்கா போரூரில் உள்ள சாப்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.;
திருப்போரூர்,
திருப்போரூரை அடுத்த தண்டலம் ஊராட்சியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் சுரேந்திரன் வயது 28. இவருக்கும் சோழிங்கநல்லூரில் வசித்து வரும் உறவினர் மகளான பிரியங்காவுக்கு (வயது 25) இடையே சிறுவயது முதலே பழக்கம் ஏற்பட்டது. என்ஜினீயரான பிரியங்கா போரூரில் உள்ள சாப்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சுரேந்திரனின் தாயும் பிரியங்காவின் தாயும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவார். எனவே சுரேந்திரன் - பிரியங்கா நட்பாக பழகி வந்ததை குடும்பத்தினர் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கிடையே அவர்களது பழக்கம் முறை தவறிய காதலாக மாறியது. இது பற்றி தெரிந்ததும் இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முறை தவறிய காதலை எடுத்து கூறி அறிவுரை வழங்கினர். ஆனால் காதலர்கள் இருவரும் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனிமையில் சுற்றி பழகி வந்தனர். இதற்கிடையே பிரியங்கா கர்ப்பம் அடைந்தார். இதனை கூறி அவர்கள் திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தாரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கூறி கர்ப்பத்தை கலைத்து விடலாம் எனவும் சகோதரி உறவு முறையில் வருவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பிரியங்கா கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் காதலர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
திருமணம் செய்து வைக்க பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த காதலர்கள் சுரேந்திரனும், பிரியங்காவும் நேற்று இரவு தண்டலம் பகுதியில் உள்ள பம்பு செட் அறையில் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நீண்டநேரம் ஆகியும் வெளியே சென்ற சுரேந்திரன் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடி சென்றபோது பம்பு செட் அறையில் சுரேந்திரனும், பிரியங்காவும் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முறைதவறிய காதலால் 8 மாத கர்ப்பிணி காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.