ரவுடி கொலை வழக்கு: தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஒருவர் சேலத்தில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.;
சேலம்,
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் என்கிற அப்பு. பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடைய இவர் ரவுடியாக வலம் வந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நாள்தோறும் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்டுள்ளார். வழக்கம்போல கடந்த ௧௫-ந்தேதி கையெழுத்திடுவதற்காக மனைவியுடன் வந்த மதன், ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக உள்ளே புகுந்துள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் உணவகத்திற்கு உள்ளே சென்று மதன்குமாரை மனைவி கண்முன்னே சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மதன்குமார் உயிரிழந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் கொலை செய்தவர்கள் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. அதை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலை செய்துவிட்டு தப்பி திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த ஹரிபிரசாத், அந்தோணி, சந்தோஷ் ,சூர்யா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரும் சேலம் அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: கிருஷ்ண காந்த், செல்வ பூபதி, வெற்றி (எ) விக்னேஷ், சின்னத்தம்பி, பிரவீன் ஷா, ரத்தினம் வர்ஷா, ராஜ்.